உலகளாவிய சமகால சவால்களை எதிர்கொள்வதற்காக கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அழைப்பு

உலகளாவிய சமகால சவால்களை எதிர்கொள்வதற்காக கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அழைப்பு

003_MG9125_P

 

 26 அக்டோபர் 2019 அன்று அஸர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் 18 வது உச்சி மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபகக் கொள்கைகளில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், குறிப்பாக வறுமை மற்றும் பயங்கரவாதத்தை எடுத்துக்காட்டி, சமகால உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக, அமைப்பின் கூட்டான அவதானத்திற்காக அழைப்பு விடுத்தார்.

2030 அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் குறிக்கோள்களை அடைவதற்கு வறுமை மிகப் பெரிய தடையாக இருப்பதைக் கவனித்த அமைச்சர் மாரப்பன, இலங்கையின் அபிவிருத்தி உத்திகளின் மையத்தில் வறுமையை ஒழிப்பது எவ்வாறு உள்ளது, சமூக சமத்துவமின்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சலுகைகள் குறைந்தவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஏராளமான நலன்புரி நடவடிக்கைகள் ஆகிய நாட்டின் முயற்சிகள் குறித்து அணிசேரா இயக்கத்தின் உறுப்பு நாடுகளுக்கு விளக்கினார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும் பயங்கரவாதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இலங்கை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்வதை மீண்டும் வலியுறுத்தி, வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மாரப்பன காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளின் பாரதூரம் குறித்து வலியுறுத்தியதுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் சிலியில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு சாசனத்தின் தரப்பினர்களின் 25 வது மாநாட்டின் போது, இந்த உலகளாவிய அச்சுறுத்தலின் தாக்கங்களைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் மேலும் மேம்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். தென் உலகின் கூட்டுக் குரலாக செயற்பட்டு வரும் அணிசேரா இயக்கத்தின் பொருத்தப்பாட்டை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டிய அதே வேளை, பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் இயல்பாகவே முக்கியத்துவம் வாய்ந்த மதிப்புக்களை இந்தக் குழு எவ்வாறு வெற்றி கொண்டது என்பது குறித்தும் நினைவுகூர்ந்தார்.

உச்சிமாநாட்டிற்கு முன்னராக புதன்கிழமை நடைபெற்ற ஆயத்த அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் மாரப்பன உரையாற்றினார்.

இலங்கை, பண்டுங் கோட்பாடுகள் என அழைக்கப்படும் அணிசேரா இயக்கத்தின் முக்கிய மதிப்புக்கள் வகுக்கப்பட்ட, 1955 ஆம் ஆண்டு பண்டுங் மாநாட்டின் இணை அனுசரணையாளராகும். மேலும், இலங்கை அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் உள்ளது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

26 அக்டோபர் 2019

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close