வெளிநாட்டு உறவுகள் அமைச்சர்

ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர், கௌரவ. எம்.யு.எம். அலி சப்ரி
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்

 

தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை சாஹிரா கல்லூரியில் கற்ற ஜனாதிபதி சட்டத்தரணி திரு. எம்.யு.எம். அலி சப்ரி, 1992 இல் இலங்கை சட்டக் கல்லூரியில் நுழைந்தார். சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்தில் அவர் குறிப்பிடத்தக்க மாணவத் தலைவராகவும் சட்ட மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், எஸ்.எல்.எப்.பி. சட்ட மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டதோடு, சட்டக் கல்லூரி சிங்கள விவாதக் குழுவிற்கும் தலைமை தாங்கினார். 1995ஆம் ஆண்டு இலங்கையின் சட்டத்தரணியாக அனுமதிக்கப்பட்டார்.

தனிப்பட்ட வழக்குத் துறையை தெரிவு செய்த திரு. அலி சப்ரி, குறுகிய காலத்திற்குள் மிகவும் வெற்றிகரமான வழக்கு நடைமுறையை நிறுவினார். அவர் மிகவும் விரும்பப்படும் ஆலோசகராக இருந்த அதே வேளை, பொது நல வழக்குகள், கெடுபிடி, மருத்துவ அலட்சியம், வணிக மற்றும் புலமைச் சொத்துரிமை சட்டம் தொடர்பான சட்டத்தின் பரந்த அளவிலான சட்டத்தை உள்ளடக்கிய பல உயர் மற்றும் முக்கிய வழக்குகளில் தோற்றினார். அவரது பல வழக்குகள் இலங்கை சட்ட அறிக்கைகளில் பதிவாகியுள்ளதுடன், திரு. சப்ரி அவர்களால் கையாளப்பட்ட வழக்குகளின் தீர்ப்புக்கள் பல வெளியீடுகளில் வெளிவந்துள்ளன. தனது பணிக்காக 2009ஆம் ஆண்டில் சட்டத்தில் சாதனை படைத்தமைக்காக அந்த ஆண்டின் சிறந்த இளம் நபருக்கான விருதைப் பெற்றார்.

அவரது நீதிமன்ற நடைமுறைக்கு மேலதிகமாக, அவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயல் உறுப்பினராகவும் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர் பதவியையும் வகித்தார். அவர் செயற்குழு உறுப்பினராகவும், கனிஷ்ட சட்டக் குழுவின் தலைவராகவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் எதிர்கால சட்டக் கல்விக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார். அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்ததுடன், சிவில், குற்றவியல் மற்றும் வணிகத் துறைகளில் நிபுணத்துவ அறிவைப் பெற்ற புகழ்பெற்ற சட்டத்தரணிகள் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளை உள்ளடக்கிய இலங்கையின் மிகவும் மரியாதைக்குரிய சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டார்.

திரு. அலி சப்ரி அரச பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உட்பட அரச மற்றும் தனியார் துறையில் பல்வேறு சபைகள் மற்றும் நிர்வாக சபைகளில் பணியாற்றியுள்ளார். 1997ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரியாக பணியாற்றினார். உலக இளைஞர்களுக்கான ‘நிப்போன் மரு’ கப்பலுக்கு இலங்கைத் தூதுக்குழுவை வழிநடத்திச் சென்ற அவர், 2012 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்தார்.

திரு. அலி சப்ரி 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டதுடன், இது தொழிலில் சிறந்து விளங்கும் சட்டத்தரணிகளுக்கு வழங்கப்படும் மிகவும் உயர்ந்த கௌரவமாகும்.

2020 ஆகஸ்ட் 12ஆந் திகதி திரு. அலி சப்ரி இலங்கையின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். திரு. அலி சப்ரி பதவியேற்றதும், இலங்கை நீதித்துறையின் முன்னனொருபோதும் இடம்பெற்றிராத, லட்சியமான மற்றும் பரந்த அளவிலான சீர்திருத்தத்தை ஆரம்பித்தார். அமைச்சரின் நீதித்துறை சீர்திருத்தத் திட்டம் தற்போது 100 க்கும் மேற்பட்ட சட்டங்களை திருத்தம் செய்து அறிமுகப்படுத்தும் செயற்பாட்டில் உள்ளதுடன், அவற்றில் சில ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மாற்றப்படவில்லை. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சட்டப் பகுதிகளைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தற்போது சிவில் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் வணிகச் சட்டம் உள்ளிட்ட சிறப்புச் சீர்திருத்தப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஆலோசனைக் குழுக்களிலும் 5 முக்கிய துணைக் குழுக்களிலும் பணியாற்றி வருகின்றனர். திரு. அலி சப்ரி, நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கல் இயக்கம், நாடு முழுவதும் நீதிமன்றங்களை விரிவுபடுத்துதல் மற்றும் சட்டங்களின் தாமதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விஷேட நீதிமன்றங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றையும் தொடங்கினார்.

2021ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வில், இலங்கை நீதித்துறையை சீர்திருத்துவதற்கான அவரது முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், திரு. அலி சப்ரி ஒரு நிகழ்வில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டார். கோவிட்-19 தொற்றுநோயின் சட்ட அம்சங்கள் குறித்த பொதுநலவாய சட்ட அமைச்சர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்கவும் அவர் நியமிக்கப்பட்டதுடன், கொலம்பியாவில் 2021 இல் நடைபெற்ற உலக சட்ட காங்கிரஸில் பேச்சாளராகவும் அழைக்கப்பட்டார்.

2022 ஏப்ரல் 04ஆந் திகதி திரு. அலி சப்ரி இலங்கையின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான முக்கிய பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. க்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு நிதி அமைச்சராக அவர் தலைமை தாங்கினார்.

திரு. அலி சப்ரி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக 2022 ஜூலை 22ஆந் திகதி நியமிக்கப்பட்டார்.

Print Friendly, PDF & Email

Close