துபாயில் எக்ஸ்போ 2020 இல் இலங்கைக் கூடம் திறந்து வைப்பு

துபாயில் எக்ஸ்போ 2020 இல் இலங்கைக் கூடம் திறந்து வைப்பு

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸுக்கான இலங்கையின் துணைத் தூதுவரும், எக்ஸ்போவுக்கான இலங்கையின்  பிரதி ஆணையாளர் நாயகமுமான திரு. நலிந்த விஜேரத்ன மற்றும் எக்ஸ்போ 2020 இன் தலைமை சர்வதேசப் பங்கேற்பாளர் அதிகாரி திரு. ஒமர் ஷெஹாதே ஆகியோர் 2021 அக்டோபர் 01ஆந் திகதி எக்ஸ்போ 2020 இற்கான இலங்கைக் கூடத்தை துபாய் எக்ஸ்போ வளாகத்தில் கூட்டாகத் திறந்து வைத்தனர்.

தொடக்க விழாவில், இலங்கையின் பாரம்பரிய நடன ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட மகுல் பெரா மற்றும் பாரம்பரிய கண்டியன் நடன நிகழ்ச்சியுடன் விருந்தினர்களை வரவேற்பதற்கான வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றதுடன்,  அதனைத்; தொடர்ந்து இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய கீதங்கள் மற்றும் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் திரு. நலிந்த விஜேரத்ன முக்கிய உரையை நிகழ்த்தினார்.

எக்ஸ்போ துபாயில் உள்ள இலங்கைக் கூடாரம், இலங்கைத் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றின் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை சுற்றுலாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்போ 2020 இன் 'வாய்ப்பு' மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கூடம் முக்கியமாக நாட்டின் தனித்துவமான பன்முகத்தன்மையை சுற்றுலாக் கண்ணோட்டத்தில் உலகிற்குக் காண்பிப்பதில் கவனம் செலுத்துகின்றது. அதே சமயத்தில், நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கை அழகு, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், இலங்கைத் தேயிலை, கலை மற்றும் கைவினைப்பொருட்கள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் உள்ளிட்ட உலகிற்கு இலங்கை வழங்கும் தயாரிப்புக்களும்  ஆறு மாத கால கண்காட்சிக் காலத்தில் ஊக்குவிக்கப்படுகின்றது. எக்ஸ்போ பங்கேற்புக்கு இணையாக, இருதரப்பு கலாச்சார உறவுகள், இலங்கைத் தேயிலை, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல விளம்பர நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.

எக்ஸ்போ 2020 என்பது ஐக்கிய அரபு இராச்சியத்தில் 01 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரை துபாயால் நடாத்தப்படும் உலகக் கண்காட்சி ஆகும். முதலில் 20 அக்டோபர் 2020 முதல் 10 ஏப்ரல் 2021 வரை திட்டமிடப்பட்டிருந்த இது கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையின் துணைத் தூதரகம்,

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ்

2021 அக்டோபர் 06

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close