பங்களாதேஷுடன் கப்பல் துறையில் மேலும் ஒத்துழைப்பது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்

 பங்களாதேஷுடன் கப்பல் துறையில் மேலும் ஒத்துழைப்பது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடல்

பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. ஏ.கே அப்துல் மொமன் அவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக,  அமைச்சரவை அந்தஸ்துள்ள கப்பற்துறை இராஜாங்க அமைச்சர் காலிட் மஹ்மூத் சௌத்ரியுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (16/11) கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் இடையிலான ஒத்துழைப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் கப்பல் போக்குவரத்தும் ஒன்றாகும். வளைகுடா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு செல்வதற்காக இலங்கையில் ஒரு போக்குவரத்து மையம் பயன்படுத்தப்பட்டால், சிட்டகொங் மற்றும் இலங்கைத் துறைமுகங்களுக்கு இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பானது நேரம் மற்றும் நிதி வளங்கள் ஆகிய இரண்டையும் மிச்சப்படுத்தி, இரு நாடுகளிலும் வெற்றிகரமான சூழ்நிலை பிரதிபலிக்கப்படும் என அமைச்சர்களான ஜீ.எல் பீரிஸ் மற்றும் காலிட் சௌத்ரி ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டனர். ஜப்பானின் உதவியுடன் ஆழ்கடல் துறைமுகமாக உருவாக்கப்பட்டு  வரும் கொக்ஸ் பஸார் மாவட்டத்தில் உள்ள மதர்பாரி உட்பட பல துறைமுகங்களை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளுடன் பங்களாதேஷில் கப்பல் போக்குவரத்திற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தற்போது முக்கியத்துவம் அளித்து வருவதை பங்களாதேஷ் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் கூட்டத்தொடர் டாக்காவில் நடைபெற்றதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக கூட்டுச் செயற்குழுவை விரைவில் கூட்டுவதற்கு அமைச்சர்கள் தீர்மானித்தனர். 2022ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் கொழும்பில் கூட்டத்தை நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டது. இலங்கையில் உள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சருடன் கலந்துரையாடி, கூட்டுச் செயற்குழுவை விரைவில் கூட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். தீவன சேவைகள் மற்றும் விரிவான கடலோர  கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் தொடர்பான விடயங்களும் கொழும்பில் நடைபெறும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதார ஒத்துழைப்பை திருப்தியுடன் சுட்டிக்காட்டிய இரு அமைச்சர்களும், உறவை  மேலும் வலுப்படுத்துவதற்கு கப்பல் துறை ஒரு முக்கிய அங்கமாகும் என்பதை ஒப்புக்கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close