வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களுடன் அமெரிக்க முதன்மை உதவிச் செயலாளர் தூதுவர் வெல்ஸ் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்

வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களுடன் அமெரிக்க முதன்மை உதவிச் செயலாளர் தூதுவர் வெல்ஸ் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்

                                               IMG_0039                                                       

வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் இலங்கையின் அபிவிருத்திக்கான பங்களிப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக செயன்முறைக்கு மதிப்பளித்தமைக்காக இலங்கையின் பாராட்டுக்களை அமெரிக்காவிடம் தெரிவித்தார். ஜனவரி 14 ஆம் திகதி காலையில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் அமெரிக்க முதன்மை உதவிச் செயலாளர், தூதுவர் அலிஸ் வெல்ஸ் அவர்களுடனான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்தக் கருத்தினை வெளிப்படுத்தினார்.                                

 

இரு நாடுகளுக்கும் பொதுவான ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பற்றிக் குறிப்பிட்ட தூதுவர் வெல்ஸ் அவர்கள், அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலானது, இலங்கையின் ஜனநாயக செயற்பாடுகளை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். இப்பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் மூலோபாயத்தினை வெளிப்படுத்தி, இலங்கையுடன் பலமானதொரு உறவினைக் கட்டியெழுப்ப விரும்பும் அமெரிக்காவின் ஆர்வத்தினைத் தெரிவித்த தூதுவர் வெல்ஸ், இருதரப்பு ஈடுபாடுகள் தொடர்பில் அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தினார். இக்கலந்துரையாடலின் போது, பொருளாதாரம், வணிகம், கல்வி, பாதுகாப்பு, கடல்சார் அலுவல்கள், இராணுவ உறவுகள், பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுறவு மற்றும் அமெரிக்காவின் இந்து - பசுபிக் மூலோபாயத்தின் கீழுள்ள முயற்சிகள் தொடர்பான கூட்டுறவை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.

அமெரிக்காவின் உதவியைப் பாராட்டிய அமைச்சர் குணவர்த்தன, இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கான கூடிய சந்தைப்பெறுவழிகள் மற்றும் இலங்கையிலான பாரிய முதலீடுகள் ஆகியவற்றுக்கான தேவையையும் குறிப்பிட்டார். பாதுகாப்பு, கடல்சார் வளங்கள், சுற்றுலாத்துறை மேம்பாடு போன்றவற்றில் அதிகரித்த ஈடுபாடு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றிலான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான வணிகம் உள்ளடங்கலான சகல துறைகளிலுமான அமெரிக்க – இலங்கை உறவுகளைப் பலப்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை அமைச்சர் வெளிப்படுத்தினார். அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கான நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கான இருதரப்பினரதும் இணந்த செயற்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கையின் நிகழ்வுகள் பற்றியும் இணக்கப்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் புதுப்பிக்கப்படவேண்டிய முயற்சிகள் பற்றியும் அமெரிக்க தூதுக்குழுவுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அரசாங்கம் இலங்கையில் ஸ்திரத்தன்மையை நிறுவியுள்ளமையை வலியுறுத்திய அமைச்சர், நாட்டினுள்ளும் பொருளாதார, வணிக மற்றும் அரசியல் துறைகளிலும் தன்னம்பிக்கை கட்டியெழுப்பப்படுவதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில்  தங்கியிருக்கும் காலப்பகுதியில், தூதுவர் வெல்ஸ் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்தார்.

அமெரிக்க முதன்மை உதவிச் செயலாளர் தூதுவர் அலிஸ் வெல்ஸ் அவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதியின் பிரதி உதவியாளரும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளருமான திருமதி லீசா கேர்ட்டிஸ் அவர்களும் இக்கலந்துரையாடலில் இணைந்திருந்தார். இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தரப்பில், அமைச்சருடன் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

 

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
14 ஜனவரி 2020

 

IMG_0045 IMG_0075

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close