லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடானது 2021 மார்ச் 19ஆந் திகதி அனுமதிக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவுக்கு ஆதரவாகத் தீர்மானித்த உயர்நீதிமன்றம், அவரை குற்றவாளியாகக் கருதிய வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் 2019 டிசம்பர் 06ஆந் திகதிய தீர்ப்பை ரத்துச் செய்து அவரை விடுவித்தது. 2018 பெப்ரவரி 04ஆந் திகதி இலங்கையின் 70வது சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் போராட்டங்களை நடாத்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான ஆர்ப்பாட்டக்காரர்களான பிரதிவாதிகள், மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவுக்கு செலவுகளை செலுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளின் வாதங்களை நிராகரித்த உயர்நீதிமன்றம், மேஜர் ஜெனரல் பெர்னாண்டோவின் சார்பான வாதங்களை ஏற்றுக்கொண்டதுடன், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரண்டும் அரச தரப்புக்களாகத் திகழ்ந்த 1961ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், இராஜதந்திர விடுபாட்டுரிமைகள் குறித்த பாரம்பரியக் கருத்துக்களை உறுதிப்படுத்தியது. 'சாசனத்தின் விளக்கம் 'பகட்டு மொழியில்' ஒரு பயிற்சியாக இருக்கக்கூடாது. அதை அதன் 'பொருள் மற்றும் நோக்கம்' ஆகியவற்றின் சூழலில் வாசிக்க வேண்டும்' என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. வியன்னா சாசனத்தின் செயற்றிறன் பெரும்பாலான சாசனங்களை விடவும், அதன் பரஸ்பர செயற்பாட்டைப் பொறுத்தது என நீதிமன்றம் தெரிவித்தது. வியன்னா சாசனத்தின் பிரிவு 47.2 ஆனது, பெற்றுக் கொள்ளும் அரசின் சொந்தப் பணிகளுக்கு பொருந்தும் வகையில் அந்த அரசு அந்த விதிமுறைக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை வழங்கினால், அனுப்பி வைக்கும் அரசின் இராஜதந்திர முகவர்களுக்கு விதிமுறையொன்றைப் பயன்படுத்துவதனைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு பெற்றுக் கொள்ளும் அரசிற்கும் அங்கீகாரம் அளிக்கின்றது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் திருப்தியற்ற தீர்ப்பாயங்களின் அபாயத்திலிருந்து எழுகின்ற இராஜதந்திர செயற்பாடுகளின் திறமையான செயற்றிறனுக்கான அச்சுறுத்தலின் அபாயத்தையும் ஐக்கிய இராச்சிய உயர்நீதிமன்றம் ஈர்த்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் பார்வையில், பிரித்தானிய வெளிநாட்டு இராஜதந்திரப் பணியாளர்களுக்கு இராஜதந்திர விடுபாட்டுரிமையை வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நோக்கமானது, பிரித்தானிய இராஜதந்திரப் பணியாளர்கள் வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட விடுபாட்டுரிமையை அனுபவிப்பதை உறுதி செய்வதாகும்.

வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சமமான பாதுகாப்பிற்கு ஈடாக, ஐக்கிய இராச்சியத்தின் இராஜதந்திர ஊழியர்களுக்கும் இராஜதந்திர விடுபாட்டுரிமை வழங்கப்கப்படல் வேண்டும் என்ற கோட்பாடு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அனைத்து இராஜதந்திர ஊழியர்களுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றது என ஐக்கிய இராச்சிய உயர் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது. விடுபாட்டுரிமையை வழங்குவதானது அமைச்சர்கள் அதிகார வரம்புக்கு சார்ந்தது அல்ல, மாறாக இது சட்டத்தின் மூலமாகவும், இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா சாசனத்திலும் தங்கியுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டபோது மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ மீதமுள்ள விடுபாட்டுரிமையால் பாதுகாக்கப்படவில்லை என்ற தனது தீர்மானத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரியாக தீர்ப்பளிக்கவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானித்தனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மார்ச் 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close