இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே சிரேஷ்ட அதிகாரிகளுக்கான 05வது சுற்று பேச்சுவார்த்தை மற்றும் 03வது மூலோபாய கடல்சார் உரையாடல்களானது, 2025 மார்ச் 25 முதல் 26 வரை கென்பெராவில் உள்ள ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தில் நடைபெறவுள்ளன.
இந்த இரண்டு கூட்டங்களுக்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி யசோஜா குணசேகர மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் முதல் உதவிச் செயலாளர் திருமதி சாரா ஸ்டோரி ஆகியோர் இணை-தலைமை தாங்கவுள்ளனர்.
இவ்வாலோசனைக் கூட்டங்களில், அரசியல் ஈடுபாடு, பொருளாதார கூட்டாண்மை, கடல்சார் ஒத்துழைப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான ஈடுபாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்தரப்பு உறவுகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளன. இரு நாடுகளுக்கும் ஆர்வமுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025, மார்ச் 24