நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான பயனுள்ள கட்டமைப்பு

நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான பயனுள்ள கட்டமைப்பு

Picture1

நிலையான அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களால் நியமிக்கப்பட்ட செயற்குழு 2020 ஜூலை 23 வியாழக்கிழமை அமைச்சருக்கு தமது அறிக்கையை சமர்ப்பித்தது.

அறிக்கையை முன்வைக்கையில், இந்த இலக்குகள் பல நிறுவனங்களின் கீழ் வரும் குறுக்குவெட்டு மிகுந்ததொரு தன்மையில் இருப்பதால், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உயர்மட்டத்திலான தலைமை மிகவும் முக்கியமாவதுடன், ஆதலால் மிக உயர்ந்த அரசியல் மட்டத்திலான மேற்பார்வை முற்றிலும் அவசியமானது என்பதை செயற்குழுவின் தலைவரான வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அஹமத் ஏ. ஜவாத் அவதானித்தார்.

கோவிட்-19 தொடர்பான நிலைமையைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரிப்பதற்கான செயற்குழுவின் ஈடுபாடுகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் பாராட்டியதுடன், அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவது தொடர்பாக இந்த நேரத்தில் இந்த அறிக்கை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் செயற்குழுவானது வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பல்தரப்பு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் அஹமத் ஏ. ஜவாத் அவர்களால் தலைமை தாங்கப்பட்டதுடன், பிரதமரின் மேலதிக செயலாளரும், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் இணைச் செயலாளருமான அன்டன் பெரேரா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் கற்கைகள் சபையின் உறுப்பினரும், காமனி கொரியா பவுன்டேஷனின் தவிசாளருமான கலாநிதி. லொயிட் பெர்னாண்டோ, ருஹூனு பல்கலைக்கழகம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் விவசாயப் பேராசிரியரான கலாநிதி. சி.எஸ். வீரரத்ன மற்றும் சட்டத்தரணி / அபிவிருத்தித் துறை நிபுணரும், நிலையான முகாமைத்துவத்திற்கான விரிவுரையாளருமான சாமிந்திரி சப்பரமாது ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.

நிலையான அபிவிருத்தியின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களை அரசாங்கம் மற்றும் சமுதாயத்தில் அனைத்து மட்டங்களிலும் சீராகவும், முழுமையாகவும் மற்றும் நடைமுறை ரீதியாகவும் ஒருங்கிணைக்கக்கூடியதொரு வலுவான நிறுவனப் பொறிமுறையின் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதனை திறம்பட ஒருங்கிணைப்பதற்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு பரிந்துரை செய்கின்றது. அத்தகைய கட்டமைப்பின் கலவை நிலையான அபிவிருத்தி இலக்குகளின் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்துத் துறைகளையும் குறைப்பதே அத்தகைய பரிந்துரைகளில் ஒன்றாகும். வர்த்தகங்கள், கல்வியாளர்கள், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பழங்குடிக் குழுக்களின் அர்த்தமுள்ள ஈடுபாடானது திட்டமிடல், இலக்கு நிர்ணயம், செயற்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் செயற்பாட்டில் வெற்றியைக் குறிக்கும் ஒரு முக்கியமான காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நிலையான அபிவிருத்திக் கட்டமைப்பு என்பது, மிக உயர்ந்த மட்டத்திலான மேற்பார்வை, ஒரு முழு அரசாங்க மற்றும் முழு சமூக அணுகுமுறையை நோக்கி மாற்றுவதற்கான பல்தரப்புப் பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு, திட்டமிடல், நிலையான அபிவிருத்தி இலக்கின் சீரமைப்பு, கொள்கை ஒத்திசைவு, தேசிய நிலையான அபிவிருத்தி இலக்குக் குறிகாட்டிக் கட்டமைப்பு, ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் பொறிமுறை, திறன் அபிவிருத்தி, மாற்றுத் தரவு மூலங்களைப் பயன்படுத்துதல், நிதிக் கட்டமைப்பின் அபிவிருத்தி, உள்நாட்டு வளங்களை அணிதிரட்டல், பொதுத்துறைக் கண்டுபிடிப்புக்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் ஆதரித்தல் மற்றும் தேசிய கண்டுபிடிப்பு நிறுவகத்தை நிறுவுதல் போன்ற பல்வேறு உத்தேச நடவடிக்கைகள் தேவைப்படும் ஒரு உருமாறும் நிகழ்ச்சி நிரலாகும் என்றும் இந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகின்றது.

'எமது உலகை மாற்றியமைத்தல்: நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை', 2015 செப்டம்பர் 25 - 27 வரை நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் சந்தித்துக் கொண்ட இலங்கை உட்பட அரச மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்தக் கட்டமைப்பானது, 2030 ஆம் ஆண்டளவில் நிலையான வளர்ச்சியை அடைந்து, மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகளின் சாதனைகளை அடைந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலானது, ஒவ்வொரு இலக்கின் கீழும் 169 இலக்குகள் மற்றும் குறிகாட்டிகளைக் கொண்டுள்ள 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கியுள்ளது. நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காக, 2017 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் சட்டம் மற்றும் நிலையான அபிவிருத்தி சபையை ஸ்தாபித்தல் உட்பட பல நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. கட்டமைப்பின் இறுதித் தசாப்தமான 2020 - 2030 க்கான 'நடவடிக்கை தசாப்தம்' இந்த வருடம் ஆரம்பமாகியது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

24 ஜூலை 2020

Picture2

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close