'நவ்ரூஸ் சீசன்-2023 இல் இலங்கை இலக்கு' - தெஹ்ரானில் உள்ள இலங்கைத்  தூதரகம் சுற்றுலா வசதி நிகழ்வை முன்னெடுப்பு

 ‘நவ்ரூஸ் சீசன்-2023 இல் இலங்கை இலக்கு’ – தெஹ்ரானில் உள்ள இலங்கைத்  தூதரகம் சுற்றுலா வசதி நிகழ்வை முன்னெடுப்பு

விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா முகவர் சங்கம், ஆசாத் சர்வதேச சுற்றுலா  அமைப்பு மற்றும் ஈரானில் உள்ள எயார் அரேபியா நாட்டு அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து, ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2023 ஜனவரி 23ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள அதன் சான்செரி வளாகத்தில் 'நவ்ரூஸ் பருவத்தில் இலங்கை இலக்கு (பாரசீகப் புத்தாண்டு)-2023' என்ற சுற்றுலா வசதி நிகழ்வை ஏற்பாடு செய்தது. ஈரானில் உள்ள பயணத் துறையினர், விமான நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் ஏனைய துறைகளின் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். மார்ச் 2023 இல் பாரசீகப் புத்தாண்டின் போது ஈரானில் இருந்து இலங்கைக்கு அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு ஈரானில் இலங்கையின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஜி.எம்.வி. விஸ்வநாத் அபோன்சு பங்கேற்பாளர்களை வரவேற்றதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். இலங்கை மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் சுற்றுலாத் தொழில்களுக்கு இடையே நன்கு நிறுவப்பட்ட தொடர்புகளால் பயனடைய முடியும் என்பதை அவர் எடுத்துரைத்ததுடன், ஈரானில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு வசதி செய்ய பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை வலியுறுத்தினார்.

தூதரகத்தின் 'இலங்கை சுற்றுலா' பற்றிய விளக்கமான விளக்கத்தைத் தொடர்ந்து, கூட்டத்தில் உரையாற்றிய எயார் அரேபியாவின் முகாமையாளர் அஷ்கன் ஷாசவாரி, தெஹ்ரானில் இருந்து கொழும்புக்கான மேலதிக விமானங்கள் மார்ச் 2023 இல் தொடங்கும் எனத் தெரிவித்தார். மேலும், ஈரானில் உள்ள அனைத்து சுற்றுலா மற்றும் பயண முகவர்களையும் அவர் ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்ததுடன், இலங்கைக்கு பயணம் செய்வதற்கான எயார் அரேபியாவின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார். இலங்கையில் உள்ள பயண மற்றும் சுற்றுலா நடத்துநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனிஷ்க மஹகெதர இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையில் இணைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து உரை நிகழ்த்தினார்.

ஈரானின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா முகவர் சங்கத்தின் சார்பில், கல்லிவர்  பயண முகவரமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபரிபோயிஸ் சயீதி தனது சுருக்கமான கருத்துக்களில், ஈரானில் வழக்கமான சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததற்காக இலங்கைத் தூதுவர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தமது ஒத்துழைப்பையும் உறுதி செய்தார்.

இந் நிகழ்வு வரவேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவுபெற்றதுடன், விருந்தினர்களுக்கு பரிசுப்  பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2023 ஜனவரி 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close