உயர் பதவிகள் குழுவினால் பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் - இந்த வருடத்தில் தொழில்முறை தூதரகங்களின் தலைவர்கள் விகிதம் 37% இலிருந்து 54% ஆக உயர்வடைந்துள்ளது

உயர் பதவிகள் குழுவினால் பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் – இந்த வருடத்தில் தொழில்முறை தூதரகங்களின் தலைவர்கள் விகிதம் 37% இலிருந்து 54% ஆக உயர்வடைந்துள்ளது

அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள / நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் பொருந்தும் தன்மையை ஆராய்வதற்கான இலங்கை பாராளுமன்ற உயர் பதவிகள் குழு (உயர் பதவிகள் குழு), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக பரிந்துரை செய்யப்பட்ட பதின்மூன்று நபர்களை அங்கீகரித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்களில், ஒன்பது பேர் இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த தொழில்முறை இராஜதந்திரிகளாவர்: திரு. ஏ.எஸ். கான், நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், திரு. யு.எல். முஹம்மத் ஜவுஹர், குவைத்திற்கான இலங்கைத் தூதுவர், கலாநிதி. ஏ.எஸ்.யு. மென்டிஸ், கொரியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர், திருமதி. எஸ். ஷானிகா திஸ்ஸாநாயக்க, ஜோர்தானிற்கான இலங்கைத் தூதுவர், திரு. டப்ளியு.ஜி.எஸ். பிரசன்ன, வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர், திருமதி. ஹிமாலி அருணாதிலக்க, நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர், திரு. லக்ஷித ரத்நாயக்க, கியூபாவிற்கான இலங்கைத் தூதுவர், திரு. பி.ஆர்.எஸ். சுகீஸ்வர குணரத்ன, எத்தியோப்பியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் திருமதி. டி.பி.சி.டப்ளியு. கருணாரத்ன, லெபனானிற்கான இலங்கைத் தூதுவர்.

உயர் பதவிகள் குழுவானது பின்வரும் தொழில்வாண்மையாளர்களுக்கும் தனது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது: அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி சட்டத்தரணியும், முக்கிய சட்டத்தரணி - ஆர்வலருமான திரு. ஜே.சி. வெலிஅமுன, மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக (ஓய்வுபெற்ற) முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் கபில ஜயம்பதி, மாலைதீவிற்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் மேலதிக அளவையாளர் நாயகம் திரு. நிமால் கருணாரத்ன மற்றும் கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக சர்வதேச வர்த்தக ஆலோசகரும், வர்த்தகருமான திரு. கித்சிரி அத்துலத்முதலி.

இலங்கை 52 தூதரகங்கள் / உயர்ஸ்தானிகராலயங்களை வெளிநாடுகளில் பேணி வருகின்றது. இந்த நியமனங்களுடன் சேர்த்து, வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தலைமை தாங்கும் தொழில்முறை இராஜதந்திரிகளின் விகிதாசாரமானது 2019ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் 37% இலிருந்து 54% ஆக உயர்வடைந்துள்ளது. இந்த வருடத்தில் நியமிக்கப்பட்டுள்ள 27 தூதரகங்களின் தலைவர்களில், 23 பேர் இலங்கை வெளிநாட்டுச் சேவையை சேர்ந்தவர்களாவர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

2019 ஆகஸ்ட் 10

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close