
நோர்வே இராச்சியத்தின் வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் அந்த்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் க்ராவிக், 2026, மார்ச் 3 முதல் 4 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயம் இருதரப்பு உறவில் முக்கியமானதொரு மைல்கல்லைக் குறித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான எட்டு வருடகால உயர் மட்ட ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. இவ்விஜயம் இலங்கைக்கும் நோர்வே இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.
இவ்விஜயத்தின் போது, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவுடன் பிரதி அமைச்சர் க்ராவிக் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தினார். அரசியல் உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு, மீன்வள ஒத்துழைப்பு, பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு, நட்புரீதியிலானதும், பயனுறுதிப்பாடுடையதுமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகளையும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
ஊழலுக்கு எதிரான போராட்டம், அரசியல் மற்றும் நெறிமுறை மாற்றம், நிர்வாகம், சட்டவாட்சி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர நோர்வே பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
இரு தரப்பினரும் தற்போதைய பிராந்திய மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்; ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளுக்கான பகிரப்பட்ட ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
விஜயம் மேற்கொண்ட பிரதிநிதிகள் குழு இலங்கை பாராளுமன்றத்திற்கு குறுகியதொரு விஜயத்தை மேற்கொண்டது.
தனது விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் க்ராவிக், நிலைபேறான மீன்வள முகாமைத்துவம், கடல்சார் சுற்றுச்சூழல் முறைமையைப் பாதுகாத்தல் மற்றும் சட்டத்திற்கு முரணானதும், பதிவு செய்யப்படாததும், ஒழுங்குபடுத்தப்படாததுமான மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றை இனங்காணும்வகையில் மீன்வளத்துறையில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க மீன்வள மற்றும் நீர்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரையும் சந்தித்தார்.
இவ்விஜயம் இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், எதிர்வரும் ஆண்டுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் புதுப்பிக்கப்பட்டதொரு உத்வேகத்தை அளித்தது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு 01
2026, மார்ச் 05




