
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் 2025 ஜூன் 3 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது, ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் உட்பட பல துறைகளில், ஆஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து, ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருடனான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான மக்கள் தொடர்புகள் இருதரப்பு உறவின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றென வெளியுறவு அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முக்கியமானதொரு உந்துசக்தியான சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர் ஹேரத், இலங்கையை ஓர் விருப்புத் தெரிவுக்கான இடமாகக் கருதுமாறு ஆஸ்திரேலிய உல்லாசப்பயணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான மார்லஸ் பாராட்டினார். இப்பகுதிகளில் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கான நிலைபேறானதொரு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மதிய விருந்துபசாரத்தில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பிரதமரும், பேராசிரியருமான ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் அமரசூரிய, இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மென்மேலும் பன்முகப்படுத்துவதிலும், ஆழப்படுத்துவதிலும் இலங்கையின் ஆர்வத்தையும் அவர் வலியுறுத்தினார்.
துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுடனும் பயனுறுதிப்பாடு மிக்கதொரு இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடலில் இடம்பெறும் நாடுகடந்த குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில், குறிப்பாகக் கவனம் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவானதும், தொடர்ச்சியானதுமான பாதுகாப்பு ஒத்துழைப்பை இச்சந்திப்பு உறுதிசெய்தது. அதிகரித்து வரும் கடல்சார் சவால்களை திறம்பட எதிர்கொள்ள பகிரப்பட்ட வளங்கள், உளவுத்துறை மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளிடையே மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் அங்கீகரித்தனர். பிராந்திய கட்டமைப்புகளுக்குள் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அறிவுசார் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டில் கூட்டு முயற்சிகளை விரிவுபடுத்தவும் அவர்கள் மேலும் இணங்கினர்.
துணைப் பிரதமரின் இவ்விஜயத்தில், பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஆஸ்திரேலிய வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் அதிகாரிகளும் இணைந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜூன் 03




