ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில், இவ்வாண்டின் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு, 2025 பெப்ரவரி 10 முதல் 13 வரையிலான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க துபாயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி திசாநாயக்க இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார்.
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி திசாநாயக்கா கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியின், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 பெப்ரவரி 05