கா பகுதியில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை இலங்கை நன்கொடையாக கையளிப்பு

கா பகுதியில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை இலங்கை நன்கொடையாக கையளிப்பு

பலஸ்தீன மக்களுடனான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் மனிதாபிமான உதவியின்  அடையாளமாக காஸா பகுதியில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. 2024 ஜனவரி 29 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன முன்னிலையில் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தாரக்க பாலசூரியவிடமிருந்து இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைத் அவர்களினால் இந்த நன்கொடை கையேற்கப்பட்டது. சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் கொழும்பைத் தளமாகக் கொண்ட தூதுவர்கள் மற்றும் ஈராக், குவைத், கத்தார், ஓமான், லிபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது, பலஸ்தீன மக்களுடனான இலங்கையின் ஒற்றுமையை வெளிப்படுத்திய பதில் அமைச்சர் பாலசூரிய, பாலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்கான கூட்டு நடவடிக்கையை வலியுறுத்தினார். ஸ்திரத்தன்மை திரும்பியவுடன் பலஸ்தீனத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிப்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் முன்மொழியப்பட்டுள்ள சலுகையையும் அவர் முன்னிலைப்படுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, பலஸ்தீன விடயத்தில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதுடன், உகாண்டாவின் கம்பாலாவில் அண்மையில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாட்டிலான இலங்கையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டவாறு, நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பலஸ்தீன தூதுவர் ஹம்தல்லாஹ் சைத், பலஸ்தீனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை எடுத்துரைத்ததுடன், இக் காலகட்டத்தில் நிலவுகின்ற தேவையின் போது இலங்கை அரசாங்கம் பலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியதன் மூலம் வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணச் செயற்பாட்டிற்கு உண்மையான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அமைச்சின் அவசரகால பிரதிபலிப்பு பிரிவுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் ஓ.எல். அமீர் அஜ்வத், இலங்கை தேயிலையை நன்கொடையாக வழங்க  ஏற்பாடு செய்த இலங்கை தேயிலை சபைக்கும், ரியாத்துக்கு குறித்து சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கும், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் காஸாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு தேயிலை சரக்குகளை வழங்குவதற்காக சவுதி அரேபியாவின் கே.எஸ்.ரிலீப் அறக்கட்டளைக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2024 ஜனவரி 30

  

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close