இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்க தூதுவர்களுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ஆபிரிக்க தூதுவர்களுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

புது தில்லியில் உள்ள இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திரத் தூதுவர்களுடனான தொடர் ஈடுபாடுகளின் அங்கமாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 2022 ஆகஸ்ட் 18 ஆந் திகதி ஆபிரிக்கத் தூதரகத் தலைவர்கள் குழுவுடன் உரையாடி, இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கினார். ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுடன், குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இலங்கையின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் இந்தத் தொடர்பாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எத்தியோப்பியா மற்றும் மாலியின் தூதுவர்கள், பொட்ஸ்வானா மற்றும் காம்பியாவின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அல்ஜீரியா, புர்கினா பாசோ, கினியா, லெசோதோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளின் தூதரகப் பொறுப்பாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அடுத்த ஊடாடும் அமர்வு ஆபிரிக்கத் தூதரகத் தலைவர்களின் இரண்டாவது குழுவினருடன் நடாத்தப்பட உள்ளது.

உயர்ஸ்தானிகர் மொரகொட, புது தில்லியில் பதவியேற்ற பின்னர், ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்களுடன் இந்த முறையில் உரையாடுவது இது ஐந்தாவது முறையாகும். முன்னதாக, அவர் முறையே 2022 ஜூன் 21 மற்றும் ஜூலை 19 ஆகிய திகதிகளில் ஐரோப்பிய தூதரகத்  தலைவர்கள் குழு மற்றும் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தூதரகத் தலைவர்கள் குழுவுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

அழைக்கப்பட்ட தூதரகத் தலைவர்களை வரவேற்ற உயர்ஸ்தானிகர் மொரகொட, அந்தந்த நாடுகளுடன் குறிப்பாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இலங்கையின் உறவுகளை  மேலும் வலுப்படுத்துவதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு தனது அலுவலகத்தின் அனைத்து ஆதரவையும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்கள், குறிப்பாக  இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல் மற்றும் மீள்வதற்கான திட்டங்கள் குறித்து அவர் தூதுக்குழுத் தலைவர்களுக்கு விளக்கினார். உயர்ஸ்தானிகர் மொரகொடவிடம் தூதுவர்களின் தலைவர்கள் பல கேள்விகளை முன்வைத்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த ஊடாடும் அமர்வில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புது தில்லி

2022 ஆகஸ்ட் 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close