மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி சோலிஹிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி சோலிஹிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

மாலைதீவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் அவர்கள் இன்று (01.02.2022) மாலியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் மாலைதீவு ஜனாதிபதி அதிமேதகு இப்ராஹிம் முகமது சோலிஹ் அவர்களிடம் தனது நற்சான்றிதழ் கடிதத்தையும், அவருக்கு முன்னர் பதவியிலிருந்த உணர்ஸ்தானிகரை மீளழைத்துக்கொள்ளும் கடிதத்தையும் கையளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்பான வாழ்த்துக்களை ஜனாதிபதி சோலிஹ்க்கு தெரிவித்த பின்னர், இலங்கை மற்றும் மாலைதீவு மக்களின் பரஸ்பர நலனுக்காக தற்போதுள்ள நெருங்கிய மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை ஒரு துடிப்பான மற்றும் பன்முக பங்காளித்துவமாக தனது பதவிக் காலத்தில் வலுப்படுத்தவும் பன்முகப்படுத்தவும் இலங்கை உயர்ஸ்தானிகர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். உயர்ஸ்தானிகர் குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளை உள்ளடக்கிய பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.இந்த உணர்வுகளுக்கு அன்புடன் பதிலளித்த ஜனாதிபதி சோலிஹ், உயர்ஸ்தானிகருக்கு மாலைதீவில் வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்தினார். பெப்ரவரி 4ஆம் திகதி இடம்பெறும் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி சோலிஹ் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2021 நவம்பரில் இலங்கைக்கு மேற்கொண்ட தனது வெற்றிகரமான விஜயம் மற்றும் அதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியமையை அவர் நினைவுகூர்ந்தார்.

நற்சான்றிதழ்களை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் சாதிக் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு அப்துல்லா ஷாஹித் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார். புதிய உயர்ஸ்தானிகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், மாலைதீவில் வெற்றிகரமாக பணியாற்ற்றுவதற்கு வாழ்த்தினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி சோலிஹின் உணர்வுகளை எதிரொலித்த வெளிவிவகார அமைச்சர், இலங்கையும் மாலைதீவும் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற வகையில் தற்போதுள்ள அன்பான மற்றும் நட்புறவுகளை புதிய உயரத்திற்கு முன்னேற்றுவதற்கு நெருக்கமாக இணைந்து பணியாற்ற முடியும் எனக் குறிப்பிட்டார்.

அதே நாளில், உயர்ஸ்தானிகர் சாதிக் மாலைதீவு வெளிவிவகாரச் செயலாளர் அப்துல் கஃபூர் மொஹமட்டைச் சந்தித்து, பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி, குறிப்பாக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய பொது மற்றும் தனியார் பங்காளித்துவத் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். இரட்டை வரி விதிப்பு, ஊக்குவிப்பு மற்றும் முதலீடுகளின் பரஸ்பரப் பாதுகாப்பு மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றைத் தவிர்ப்பது தொடர்பான உடன்படிக்கைகள் / புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இலங்கை வெளிநாட்டு சேவையில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியான உயர்ஸ்தானிகர் சாதிக், நிறைவேற்று மட்டத்தில் 35 வருடங்களுக்கும் மேலான அரச மற்றும் தனியார் துறை அனுபவத்தைக் கொண்டவராவதுடன், ஆரம்பத்தில் 2 ½ வருடங்கள் தனியார் துறையில் வங்கியின் நிறைவேற்று அதிகாரியாக இருந்து, தொடர்ந்து 33 வருடங்களுக்கும் மேலாக இலங்கை வெளிநாட்டு சேவையில் பல துறை அனுபவத்துடன் ஐரோப்பா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா முழுவதும் பணியாற்றியுள்ளார்.

உயர் ஸ்தானிகர் சாதிக் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பில் உள்ள ரோயல் கல்லூரியில் பெற்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டப்படிப்பைப் படித்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இந்த இரண்டு மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் தனது படிப்பைத் தொடர லீ குவான் யூ பெலோஷிப் வழங்கப்பட்டது. அவர் தொழில்முறை கணக்கியல் மற்றும் வங்கித் தகுதிகளையும் பெற்றுள்ளார்.

தனது இராஜதந்திர வாழ்க்கையில், திரு. சாதிக் சவூதி அரேபியா (2005-2007), பிரேசில் (2009-2011) மற்றும் நெதர்லாந்து (2015-2019) ஆகிய நாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவராக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.

ஜூலை 2019 முதல் மாலைதீவில் தற்போது பணிபுரியும் வரை, திரு. சாதிக் வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றினார். அமைச்சின் மிகவும் சிரேஷ்ட மேலதிக செயலாளரான அவர், வெளிவிவகாரச் செயலாளர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில் 2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு அமைச்சின் பதில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அக்டோபர் 2019 இல், திரு. சாதிக் இஸ்லாமாபாத்தில் உள்ள சார்க் நடுவர் மன்றத்தின் (சார்கோ) ஆளும் சபையின் தலைவராக இரண்டு ஆண்டு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இலங்கையின் தேசிய ஐ.எச்.எல். குழுவின் தலைவராகவும் ஆகஸ்ட் 2019 முதல் டிசம்பர் 2021 வரை மீள்பதிவுகளுக்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

மாலி

2022 பிப்ரவரி 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close