'இலங்கையை ஆராயுங்கள்' -  கத்தார் மெனாசா 2022, ஆண்டுகளின்  கலாச்சாரம் விழாவை தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னெடுப்பு

'இலங்கையை ஆராயுங்கள்' - கத்தார் மெனாசா 2022, ஆண்டுகளின்  கலாச்சாரம் என்ற தலைப்பில் இரண்டு நாள் இலங்கை கலாச்சார விழா 2022 செப்டெம்பர் 09 - 10 வரை தோஹா - கத்தாரின் கல்வி நகரத்தில் கொண்டாடப்பட்டது. தோஹாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சமூக அமைப்புக்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையின் கலாச்சாரம், கலைகள், கைவினைப்பொருட்கள், வரலாறு, மதம், இலங்கைத் தேயிலைக் கலாச்சாரம் மற்றும் இலங்கையின் வாழ்க்கை முறை மற்றும் திறன்கள் போன்றவற்றை கத்தார் அரச மக்களுக்கும் புலம்பெயர் சமூகத்தினருக்கும் வெளிப்படுத்த இந்த நிகழ்வு  இலங்கைக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.

இலங்கையின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் தோஹாவில் உள்ள ஸ்டாஃபோர்ட் ஸ்ரீலங்கா பாடசாலை தோஹா மற்றும் டினு நடன அகடமி மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட டிரம் நிகழ்ச்சிகள் நிகழ்வைக் கவர்ந்ததுடன், கண்டிய நடனம், பிரஷஷ்டி நடனம், அவ்ருது நடனம், நாட்டுப்புற நடனம் போன்ற பல்வேறு வகையான மயக்கும் நிகழ்ச்சிகளால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பார்வையாளர்கள் கவரப்பட்டனர். இத்திருவிழாவின் மற்றுமொரு முக்கிய சிறப்பம்சமாக, கண்டி, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க நான்கு கலாச்சாரங்களின் மணப்பெண்களின் சித்தரிப்பும்  இடம்பெற்றது.

இலங்கையின் கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள், உணவு மற்றும் சிலோன் தேயிலை ஆகியவற்றை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் பல இலங்கைக் கூடங்கள் அந்த இடத்தில் அமைக்கப்பட்டன. இலங்கையின் கைவினைப் பொருட்கள், பட்டிக்குகள், பல்வேறு  பித்தளைப் பொருட்கள் மற்றும் முகமூடிகள் ஆகியவை அங்காடிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  'கமே கடே' இல் இலங்கையின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் பார்வையாளர்களுக்கு பரிமாறப்பட்டன. உலகத் தரம் வாய்ந்த ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், வரலாற்று மற்றும் சமகால அதிசயங்கள், உண்மையான உணவு வகைகள் மற்றும் இயற்கை மற்றும் செழுமையான கலாச்சாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட தனித்துவமான ஆயுர்வேத மருத்துவ முறையுடன் இலங்கையை ஆரோக்கியமான பயண இடமாக ஊக்குவிக்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊக்குவிக்கப்பட்டது.

கத்தார் அருங்காட்சியகங்கள் மற்றும் கத்தார் அறக்கட்டளையின் உதவி மற்றும்  வழிகாட்டுதலுடன், கத்தார் அருங்காட்சியகங்களின் தலைவரான ஷேய்கா அல் மயாசா பின்த் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆண்டுகளின் கலாச்சாரம்' என்ற வருடாந்த முன்முயற்சியின் பேரில் இந்தக் கலாச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

சர்வதேச கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்வான 'ஆண்டுகளின் கலாச்சாரம்', நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான புரிதலை ஆழமாக்குகிறது. அதன் 10வது ஆண்டு நிறைவைக்  கொண்டாடும் வகையில், 2022ஆம் ஆண்டு 'ஆண்டுகளின் கலாச்சாரம்' மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவில் (மெனாசா) நிகழ்ச்சிகளை வழங்குகின்றது. மெனாசாவில் கத்தார் முழுப் பகுதியுடனும் கூட்டு சேர்வது இதுவே முதல் முறையாகும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கத்தார் கால்பந்து சங்கம், கத்தார் அறக்கட்டளை, கத்தார் அருங்காட்சியகங்கள், பங்கேற்கும் நாடுகளின் தோஹாவில் உள்ள தூதரகங்களின் உதவியுடன்  கத்தாரில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து கத்தார்-மெனாசா ஆண்டுகளின் கலாச்சாரம் 2022 உருவாக்கப்பட்டது.

இவ்விழாவில் தூதுவர் எம். மஃபாஸ் மொஹிதீன் தனது முக்கிய உரையில் கத்தாருக்கும்  இலங்கைக்கும் இடையில் இரு நாடுகளின் அரசியல் உறவுகளுடன் சுமுகமாக நிலவும் நீண்டகால நட்புறவு குறித்து பேசினார். மக்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும், உரையாடலை ஊக்குவிப்பதற்கும், நாடுகளுக்கிடையிலான புரிதலை ஆழப்படுத்துவதற்கும் கலாச்சாரம் மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும் என மேலும் எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இருதரப்பு உறவுகள் இருதரப்பு நலனுக்காக இந்தக் கலாச்சார ஒத்துழைப்பின் மூலம் மேலும் மேம்படுத்தப்படும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த முயற்சியில் கத்தார் அருங்காட்சியகங்கள், கத்தார் அறக்கட்டளை மற்றும் கத்தார்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் மகத்தான ஒத்துழைப்பிற்காக தூதுவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்,

தோஹா

2022 செப்டம்பர் 14

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close