ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இணைந்த ஆணைக்குழுவின் 23வது சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை இணைந்த ஆணைக்குழுவின் 23வது சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆகியவற்றின் இணைந்த ஆணைக்குழுவின் 23வது சந்திப்பானது 2021 ஜனவரி 25ஆந் திகதி வீடியோ மாநாடு மூலம் நடாத்தப்பட்டது. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகிய இரு தரப்பினரதும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற முதலாவது இணைந்த ஆணைக்குழுவாகும்.

நல்லுறவு ரீதியான மற்றும் திறந்ததொரு சூழ்நிலையில் நடைபெற்ற இணைந்த ஆணைக்குழுவின் இந்த சந்திப்பின் போது, ஆழ்ந்த ஒத்துழைப்பு உறவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியவற்றின் மக்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் பரந்த அளவிலான பாடங்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் காணப்பட்ட மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றை ஒப்புக் கொண்டன.

சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இலக்காகக் கொண்டு, கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதற்கான இலங்கை அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நல்கிய 22 மில்லியன் டொலர் மானிய உதவிக்கு இலங்கை நன்றிகளைத் தெரிவித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் உலக சுகாதார அமைப்பு வகித்த வகிபாகத்தை எடுத்துரைத்ததுடன், தொற்றுநோய் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் பயனுள்ள பல்தரப்பு முறைமையின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டன.

நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லாட்சிக்கான சிறப்பு ஊக்க ஏற்பாட்டின் (ஜி.எஸ்.பி +) கீழ் வழங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருபக்கக் கட்டண விருப்பத்தேர்வுகள் இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டன. இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் டொலர்களை (இலங்கை நாணயத்திற்கு சமமான) எட்டியுள்ளதுடன், இதன் காரணமாக இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் மாறியுள்ளது.

வழங்கப்பட்ட கட்டண சலுகைகளை இலங்கை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இணைந்த ஆணைக்குழு ஒப்புக் கொண்டது. இது சம்பந்தமாக, திறந்த மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு உகந்ததொரு திடல் அமைப்பு தேவை என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியதுடன், ஐரோப்பிய வணிகங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் கோவிட் நிலைமையைத் தொடர்ந்து, 2020 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் குறித்து அதன் வலுவான கவலைகளை வெளிப்படுத்தியது. இந்த நடவடிக்கைகளை உலக வர்த்தக அமைப்புக்கு அறிவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை பாதிக்கும் தடைகளை நிவர்த்தி செய்வதற்காக வழக்கமான ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை முதலீட்டாளர் உரையாடலை மேலும் மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும், இலங்கையும் உறுதிபூண்டுள்ளன.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி தொடர்பான ஜி.எஸ்.பி + திட்டத்தின் கீழ் உள்ள 27 சர்வதேச சாசனங்களை திறம்பட செயற்படுத்துவதனை இலங்கை உறுதிப்படுத்தியது. இந்த சூழலில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. தகுந்த திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டது. தனது அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்ட தேசிய நல்லிணக்கத்தையும் நடவடிக்கைகளையும் எவ்வாறு முன்னெடுக்கவுள்ளது என்பதை இலங்கை விளக்கியது. கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக, விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக இலங்கை அறிவித்தது. இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், சமீபத்திய ஆண்டுகளில் நிறுவப்பட்ட சுயாதீன நிறுவனங்களின் முக்கிய வகிபாகத்தை, குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றன குறித்து அடிக்கோடிட்டுக் காட்டியது. எந்தவொரு ஜனநாயகத்திற்கும் தேவையான அதன் அனைத்து பன்முகத்தன்மையிலுமான முழுமையானதொரு அதிகாரம் மற்றும் நெகிழ்ச்சியான சிவில் சமூகம் ஆகியவற்றின் மதிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. இந்த முயற்சிகளில் இலங்கையை ஆதரிப்பதற்கான தனது தொடர்ச்சியான தயார்நிலையை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்தியது.

மரண தண்டனையின் பயன்பாடு தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மரணதண்டனை மீதான தடையை பேணி வருகின்றமை குறித்த சாதனையை வரவேற்று, மரண தண்டனையை சட்டப்பூர்வமாக ரத்துச் செய்வதனை ஊக்குவித்தது. அனைத்து சூழ்நிலைகளிலும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கான தனது எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது.

2020 அக்டோபர் 28ஆந் திகதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நான்காவது ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான செயற்குழுவின் நடவடிக்கைகள் குறித்து இணைந்த ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் கோவிட்-19 பிரதிபலிப்புக்கான ஆதரவைத் தவிர, 2021 மற்றும் அதற்கு அப்பால் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் நீதித் துறையை ஆதரிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்குமான முயற்சிகளை வலுப்படுத்த உதவும் 35.75 மில்லியன் டொலர் பெறுமதியான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய மூன்று மானியங்கள் குறித்து செயற்குழு நேர்மறையாக மதிப்பீடு செய்தது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் பசுமை மீட்பு, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான சமுதாயத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சாத்தியமான புதிய நடவடிக்கைகளைத் தயாரிப்பதில் எதிர்வரும் ஆண்டுகளில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு உறுதியளித்தன.

காலநிலை மாற்றம் குறித்த எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியங்களை, குறிப்பாக பரிஸ் ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஆராய்ந்தன. உலகளாவிய கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதானது, பொருளாதாரங்களை நிலையான முறையில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தப்படல் வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற மரபுகளை நடைமுறைப்படுத்துவதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை, குறிப்பாக 2021 பெப்ரவரியில் ஐ.நா. வின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பின் மாநாட்டிற்கு சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்களின் திருத்தம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. பிளாஸ்டிக் தொடர்பான உலகளாவிய ஒப்பந்தத்தை நோக்கிய இலங்கையின் நேர்மறையான அணுகுமுறை மற்றும் 2030ஆம் ஆண்டளவில் பல்லுயிர் இழப்பை மாற்றுவதற்கான ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் அர்ப்பணிப்பு (ஜ.நா. பல்லுயிர் உச்சி மாநாட்டில் இயற்கைக்கான அவரது உறுதிமொழி மூலம்) ஆகியவற்றுக்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைப் பாராட்டியது. 2050ஆம் ஆண்டளவில் காலநிலை நடுநிலைமை மற்றும் 1990 உடன் ஒப்பிடும்போது பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை குறைந்தது 55% ஆகக் குறைப்பதற்கான 2030 இலக்குகள் உள்ளடங்கலாக அதன் காலநிலை சார்ந்த லட்சியத்தை மேம்படுத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. நிலையான, குறைந்த கார்பன் மற்றும் காலநிலை நெகிழ்திறன் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக, லட்சிய நடவடிக்கை எடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை உறுதிப்படுத்தியது. எதிர்வரும் ஐ.நா. மாநாடுகளான ஐ.நா. தரப்புக்களின் மாநாடு (சி.ஓ.பி. 26) ஐ.நா. வின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் மாநாடு மற்றும் பல்லுயிர் தொடர்பான மாநாட்டிற்கான தரப்புக்களின் 15வது மாநாடு (சி.ஓ.பி. 15) ஆகியன லட்சிய ரீதியான, அர்த்தமுள்ள கடமைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு முக்கிய வாய்ப்புக்களை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக் கொண்டன.

2019 ஜூலை மாதத்தில் கொழும்பில் நடைபெற்ற தற்காலிக பயங்கரவாத எதிர்ப்பு உரையாடலை கவனத்தில் கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா. அலுவலகம் மற்றும் இன்டர்போல் தொடர்பான ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் மீளாய்வு செய்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச மனித உரிமைத் தரங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. பயங்கரவாத எதிர்ப்பு உரையாடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது.

இயக்கம் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான சிக்கல்களும் இந்த நிகழ்ச்சி நிரலில் காணப்பட்டன. ஹொரைசன் 2020 குறித்த ஒரு குறிப்பிட்ட குறிப்புடன், உயர்கல்வி மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளுக்காக, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பின் திட்டமும் கலந்துரையாடப்பட்டது.

இந்து சமுத்திர டுனா ஆணைக்குழுவின் கட்டமைப்பிலான ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான சமுத்திரங்களைப் பாதுகாத்தல், கடல் உயிரினங்களின் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு ஆகிய பொதுவான குறிக்கோள்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

2021இல் பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ள அடுத்த இணைந்த ஆணைக்குழுக் கூட்டத்திற்கு முன்னர் பின்தொடர்வதற்கான தொடர் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக் கொண்டன.

இந்த சந்திப்புக்கு ஐரோப்பிய வெளியக செயற்பாட்டு சேவையிலான ஆசியா மற்றும் பசிபிக் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி. பவுலா பம்பலோனி மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஏ.எம்.ஜே. சாதிக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இணைந்த மற்றும் அபிவிருத்திக்கான 1995 ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் இணைந்த ஆணைக்குழு, பரஸ்பர நலன்களின் பரந்த அளவிலான இருதரப்பு மற்றும் பல்தரப்புச் சிக்கல்களைக் கையாள்கின்றது. ஒப்பந்தத்தின் சரியான செயற்பாடு மற்றும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல், முன்னுரிமைகளை அமைத்தல் மற்றும் பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன அதன் பணிகளாகும்.

இணைந்த ஆணைக்குழுவின் விதிமுறைகளின் கீழ் நிறுவப்பட்ட மூன்று செயற்குழுக்களும், 2019 ஆகஸ்ட் (வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புப் பிரச்சினைகள் தொடர்பான செயற்குழு), 2019 ஆகஸ்ட் (ஆட்சி, சட்ட விதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழு) மற்றும் 2020 அக்டோபர் 28 (அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான செயற்குழு) ஆகிய திகதிகளில் நடைபெற்ற அந்தந்த கூட்டங்களில் மீள அறிக்கையிட்டன.

கொழும்பு

2021 ஜனவரி 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close