2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு

2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக இலங்கை மற்றும் நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திப்பு

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக,  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நியூசிலாந்தின் வெளிநாட்டு       அலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் நனையா மஹூதா ஆகியோருக்கு இடையில் ஜூன் 22ஆந் திகதி இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.

தற்போது கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பணியாளர் மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து விநியோகம் தொடர்பாக இருதரப்பு நன்கொடையாளர்கள்  மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நாடு பெற்றுக் கொள்ளும் ஆதரவு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் நியூசிலாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் விளக்கினார். அடுத்த சில வாரங்களில் நிதியைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். நியூசிலாந்து மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆதரவு தொடர்பில் ஆராய்வதற்கு நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

இலங்கையின் பால் கைத்தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில்களின் அபிவிருத்தி  தொடர்பில் நியூசிலாந்தின் உதவியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் கோரினார். கோவிட்-19 தாக்கத்தினால் இலங்கையில் பொருளாதார சவால்கள் எவ்வாறு மோசமடைந்துள்ளன என்பதை அமைச்சர் பீரிஸ் விளக்கினார்.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பின் வாயிலாக கல்வியை வாழ்வாதாரத்திற்கான பொருத்தமானதாக நிலையாக மாற்றுவது குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களுக்கு இலங்கை  மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் முக்கியத்துவம் அளித்துள்ள நிலையில், கடல் தொடர்பான பிரச்சினைகளில் ஒத்துழைப்பது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

நவீன உலகில் மனிதகுலத்தின் நன்மைக்கான சக்தியாக பொதுநலவாயத்தின் எதிர்காலம் பற்றிய  எண்ணங்களை இரு அமைச்சர்களும் பகிர்ந்து கொண்டனர்.

கரீபியன் பிராந்தியத்துடன் வர்த்தகம், சுற்றுலா மற்றும் சர்வதேச அரங்குகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக டொமினிகாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி. கென்னத் மெல்கோயர்  டாரோக்ஸ் உடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூன் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close