லண்டனில் உள்ள உலக சுற்றுலா சந்தையில் இலங்கை சுற்றுலா காட்சிப்படுத்தல்

லண்டனில் உள்ள உலக சுற்றுலா சந்தையில் இலங்கை சுற்றுலா காட்சிப்படுத்தல்

2022 நவம்பர் 07 - 09 வரை எக்சல் லண்டனில் நடைபெற்ற உலகப் பயணச் சந்தையில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் பயண வர்த்தகத்தின் 57 பங்காளிகளின் பங்கேற்பை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எளிதாக்கியது.

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹூ, இலங்கை மாநாட்டுப் பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூரிய, சுற்றுலா அமைச்சின் ஆலோசனைக் குழுவின் தலைவர் பந்துக கீரித்தினந்த, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நாட்டிற்கான முகாமையாளர் சிந்தக வீரசிங்க, இலங்கை சுற்றுலா மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து பயண வர்த்தகத்திலிருந்து அழைக்கப்பட்டவர்கள் முன்னிலையில் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் நவம்பர் 07ஆந் திகதி இலங்கைக் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

மூன்று நாள் முழுவதும், இலங்கைப் பயணத் துறையின் பிரதிநிதிகள் இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பயண மற்றும் சுற்றுலாத் துறைப் பங்காளிகளுடன் தொடர்புகொண்டு வலையமைப்புக்களை ஏற்படுத்தினர். உலகப் பயணச் சந்தையானது இலங்கை குறித்த சமீபத்திய பயணம் தொடர்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பயணத் துறையில் சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளித்தது.

பார்வையாளர்கள் இலங்கையின் கலாசார வளமான பாரம்பரியங்களைப் பார்வையிடுவதற்கு, கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையின் பாரம்பரிய நடனம் உதவியது. புதிதாக காய்ச்சப்பட்ட 07 பிராந்திய சிலோன் தேயிலை கொண்ட சிலோன் தேநீர் கூடத்தில் ஒரு சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

உலகப் பயணச் சந்தையின் ஓரத்தில், சுற்றுலா அமைச்சரும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவரும் இங்கிலாந்தின் முன்னணி பயண நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் பயண ஊடகங்களுடன் தொடர்ச்சியான வணிக சந்திப்புக்களை நடாத்தினர். இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இங்கிலாந்து பிரதான நீரோட்ட மற்றும் பயண ஊடகங்களுக்கான செய்தியாளர் மாநாடும் கண்காட்சி இடத்தில் நடைபெற்றது.

சுற்றுலா மற்றும் சுற்றுலாவின் முன்னணி உலகளாவிய நிகழ்வான உலகப் பயணச் சந்தை, உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 30,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 5,000 வர்த்தகப் பங்காளிகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை ஈர்க்கின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

 

2022 நவம்பர் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close