வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஹல்டன், அண்மைய அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல்

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஹல்டன், அண்மைய அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 26ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் ஹல்டன் ஆகியோர் இருதரப்பு ஈடுபாடுகள், உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் சர்வதேச சமூகத்தின் உதவிகள் குறித்து கலந்துரையாடினர். பல பொருளாதார சவால்களை சமாளிக்க ஒத்திசைவான உத்திகளை வகுக்கும் அதே வேளையில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கினார். நீண்ட  கால பொருளாதார மீட்சியில் பலதரப்பு நிறுவனங்களுடன் ஈடுபடும் அதே வேளையில், இந்தக் காலகட்டத்தில் கிடைத்த இருதரப்பு உதவிகளை இலங்கை பாராட்டியது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை தாங்கள் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர், இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் உட்பட இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நலன்புரி நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

சட்டம் ஒழுங்கைப் பேணுதல் மற்றும் குடிமக்களின் வாழ்வுக்கு இடையூறு விளைவிக்கும் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து தற்போது அரசியல் கட்சிகள் ஆய்வு செய்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கமளித்தார். தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், மோதல்களின் பின்னரான நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் முன்னேற்றம் காண தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் முதலீட்டுத் தெரிவுகளை இங்கிலாந்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் ஹல்டன் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நிவர்த்தி செய்யும் நிலையான ஆற்றல் திட்டங்கள் மற்றும் பசுமைப் பிணைப்புகளில் இலங்கை கணிசமான ஆற்றலைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் ஹல்டன் ஆகியோர் பொதுநலவாயம் தொடர்பான முன்னேற்றங்கள், மகத்துவ மகாராணியின் பிளாட்டினம் விழாக் கொண்டாட்டங்கள் மற்றும் ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஆகியன குறித்தும் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மே 27

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close