வெளிநாட்டமைச்சர் பீரிஸிடம் பிரியா விடைபெற்றுச் சென்ற செக் தூதுவர்

 வெளிநாட்டமைச்சர் பீரிஸிடம் பிரியா விடைபெற்றுச் சென்ற செக் தூதுவர்

2021 ஒக்டோபர் 14 ஆம் திகதி வியாழனன்று இலங்கைக்கான செக் குடியரசின் தூதுவர் மிலன் ஹோவர்கா வெளிநாட்டமைச்சில் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்களிடம்  பிரியாவிடை பெற்றுச்சென்றார்.

அமைச்சர் பீரிஸ் வருகைதரு தூதுவரை (புது டெல்லியில் வசிப்பவர்) வரவேற்றதுடன், இலங்கைக்கும் செக் குடியரசிற்கும் இடையே நிலவும் நெருக்கமான மற்றும் சுமூகமான உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.  வெளிநாட்டு அமைச்சரின் உணர்வுகளை பிரதிபலித்த, செக் தூதர் ஹோவர்கா, தான் தூதராக இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு அளித்த வலுவான ஆதரவுக்கு தனது மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்தார்.

இலங்கைக்கும் செக் குடியரசிற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையின் உறவுகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிராந்திய மற்றும் பல்தரப்பு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.  சமகாலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். கோவிட் -19 தொற்றுநோய்களின்போது இலங்கையில் செக் மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு தூதுவர் தனது விஷேட பாரட்டுக்களை தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் செக் குடியரசிற்கும் இடையில் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை இடமாற்றம் செய்தல் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளும், இலங்கைக்கான  செக் குடியரசின் கெளரவ தூதரக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டமைச்சு

கொழும்பு

17 ஒக்டோபர் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close