பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சிங்கப்பூரின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம் அவர்களின் அழைப்பின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 2022 அக்டோபர் 25 - 29 வரை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

பொது ஒழுங்கைப் பேணுதல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்புக்கள் குறித்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஏற்பாடு செய்த விளக்க அமர்வில் தூதுக்குழு பங்கேற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சண்முகம், இந்த இரண்டு பகுதிகளிலும் சமீப ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சட்டக் கட்டமைப்புக்கள் மற்றும் திருத்தங்கள் குறித்த மேலோட்டப் பார்வையை வழங்கினார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரான சன் சூலிங் மற்றும் சிங்கப்பூர் தரப்பில் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்த தனி அமர்வில், சம்பந்தப்பட்ட சட்டம் மற்றும் திருத்தங்களின் செயற்பாட்டு அம்சங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து இரு தரப்பும் பயனுள்ள பரிமாற்றங்களை மேற்கொண்டன.

சிங்கப்பூரில் இடம்பெற்ற அமைச்சரின் நிகழ்ச்சி நிரலில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடனான உரையாடலும் உள்ளடங்கியிருந்ததுடன், இதன் போது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைக்குழு ஆவணங்களின் மாற்றம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்கள் மற்றும் அடையாள அங்கீகரிப்பு மற்றும் ஆவணப் பகுப்பாய்வு ஆய்வகத்திற்கான சுற்றுப்பயணம் ஆகியன இடம்பெற்றன. சிங்கப்பூரில் உள்ள குடிவரவு சோதனைச் சாவடிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்காக சிங்கப்பூர் குடிவரவு மற்றும் பதிவு மற்றும் சுங்க மற்றும் கலால் துறையின் சோதனைச் சாவடி செயற்பாடுகளை ஒன்றிணைத்து 2003ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைக்குழு நிறுவப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட செயன்முறைகள் குறித்து இரு தரப்பும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

குற்றவியல் விசாரணை, புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைக் கட்டளை உட்பட அவர்களின் பணியின் செயற்பாட்டு அம்சங்கள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை சிங்கப்பூர் பொலிஸ் படை அதிகாரிகள் வழங்கினர். சிங்கப்பூரின் சமீபத்திய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்ட சாங்கி விமான நிலையத்துக்கும் விஜயம் செய்யப்பட்டது.

பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் கலந்துரையாடப்பட்ட இந்த விஜயத்தின் முடிவில், அமைச்சர் அலஸ் மற்றும் தூதுக்குழுவினருக்கு அமைச்சர் சண்முகம் மதிய உணவு விருந்தளித்தார்.

அமைச்சருடன் சென்ற தூதுக்குழுவில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், இலங்கை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

சிங்கப்பூரின் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவுடன் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த விஜயத்தை ஒருங்கிணைத்தது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

சிங்கப்பூர்

2022 நவம்பர் 04

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close