இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களின் ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளைத் தடுக்கும் முகமாக ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் 'புதிய நடைமுறை' அறிமுகம்

இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களின் ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளைத் தடுக்கும் முகமாக ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ‘புதிய நடைமுறை’ அறிமுகம்

இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்கள் ஒழுங்கற்ற முறையில் ஓமான் சுல்தானேட்டிற்கு இடம்பெயர்வதனைத் தடுக்கும் முகமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஓமான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, ஓமான் சுல்தானேட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய நடைமுறையின்படி, ஆட்சேர்ப்பு முகவர் அல்லது தனிநபர் பொறுப்பேற்பு ஆதரவாளர்கள் மஸ்கட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் வழங்கிய 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களின் பணி ஒப்பந்தத்துடன் சேர்த்து சமர்ப்பிப்பதனால் மாத்திரமே கடவுச்சீட்டுக்களுக்கான பணியகம் மற்றும் ஓமான் அரச பொலிஸ் குடியிருப்பு ஆகியன இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வீசாவை வழங்கும்.

எனவே, இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களை ஓமான் சுல்தானேட்டில் பணியமர்த்துவதற்காக ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் தனிநபர் பொறுப்பேற்பு ஆதரவாளர்கள் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திலிருந்து 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' பெற்றுக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஓமான் சுல்தானேட்டில் பணியமர்த்த விரும்பும் அனைத்து ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் தனிநபர் பொறுப்பேற்பு ஆதரவாளர்களுக்கும் பின்வரும் நடைமுறையை பின்பற்றுமாறு மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகின்றது:

  1. இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொரு பெண் வீட்டுப் பணியாளரினதும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை ஓமான் சுல்தானேட்டின் மனிதவள அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு தேவையான சான்றளிப்புக்களுக்காக சமர்ப்பித்தல்.
  2. ஓமான் சுல்தானேட்டின் மனிதவள அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன சான்றளித்த வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அங்கீகாரத்திற்காக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சமர்ப்பித்தல்.
  3. இலங்கைத் தூதரகம் அங்கீகரித்த வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை அனுப்புவதன் மூலம் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் சட்டரீதியான அமைப்பான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப பணியகத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
  4. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பெண் வீட்டுப் பணியாளரைப் பதிவுசெய்த பின்னர், 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' வழங்குவதற்காக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு ஒரு கோரிக்கைக் கடிதத்தை சமர்ப்பித்தல்.
  5. இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொரு பெண் வீட்டுப் பணியாளரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கட்டாயமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதனை சரிபார்த்ததன் பின்னர், மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' வழங்கும்.
  6. பின்னர், ஓமான் சுல்தானேட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்கள் பணிகளில் ஈடுபடும் பொருட்டு, அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பு வீசாவினை வழங்குவதற்காக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் வழங்கிய 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழுடன்' வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை கடவுச்சீட்டுக்களுக்கான பணியகம் மற்றும் ஓமான் அரச பொலிஸ் குடியிருப்பு ஆகியவற்றுக்கு சமர்ப்பித்தல்.

இந்த நோக்கத்திற்காக, 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழ்' இலவசமாக வழங்கப்படும் என்பதை மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. இலங்கைத் தூதரகத்தினால் 'ஆட்சேபனையில்லாமைக்கான சான்றிதழை' வழங்குவதற்கான புதிய நடைமுறை 2020 அக்டோபர் 01 ஆந் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது.

இந்த புதிய நடைமுறையைப் பற்றி தயவுசெய்து அறிந்து கொள்ளுமாறு ஓமான் சுல்தானேட்டில் தொழில்வாய்ப்புக்களைத் தேட விரும்பும் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்றுமாறு அவர்களின் ஆட்சேர்ப்பு முகவர் அல்லது தனிநபர் பொறுப்பேற்று ஆதரவாளர்களையும் கோருவதற்கு மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் விரும்புகின்றது. எந்தவொரு மூன்றாம் நாடு வழியாக விஜயம் / சுற்றுலா வீசா என்ற பிரிவின் கீழ் ஓமான் சுல்தானேட்டில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளிக்கும் நேர்மையற்ற முகவர்கள் / தனிநபர்களிடம் சிக்கி விட வேண்டாம் என எதிர்வரும் காலங்களில் விஜயம் செய்யவுள்ள இலங்கையைச் சேர்ந்த  பெண் வீட்டுப் பணியாளர்களுக்கு தூதரகம் அறிவுறுத்துகின்றது.

இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களின் ஒழுங்கற்ற இடம்பெயர்வு / கடத்தலைத் தடுப்பதற்காக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு கட்டாயமாக கட்டுப்பட்டு, தூதரகத்துடன் ஒத்துழைக்குமாறு ஓமான் சுல்தானேட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுப் பணியாளர்களை பணியமர்த்த விரும்பும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்ளூர் ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் தனிநபர் பொறுப்பேற்று ஆதரவாளர்களையும் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொள்கின்றது.

இலங்கையைச் சேர்ந்த பெண் வீட்டுத் தொழிலாளர்களின் ஒழுங்கற்ற இடம்பெயர்வு / கடத்தலைத் தடுப்பதற்காக இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவதில் ஓமான் சுல்தானேட் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து பங்குதாரர்களினதும் அன்பான ஒத்துழைப்பு மற்றும் உறுதியான ஆதரவிற்காக ஓமான் சுல்தானேட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்

மஸ்கட்

06 நவம்பர் 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close